ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்காக உயர் தொழில்நுட்ப அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பது அவசியம் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் வலியுறுத்தினார்.
இப்பல்கலைக்கழகத்தின் உயிரியியல் துறை சார்பில் அறிவியல் மன்றம் தொடக்கம் மற்றும் ரூ. 35 லட்சம் மதிப்பிலான உயர் தொழில்நுட்ப ஆய்வக உபகரணங்கள் ஒப்படைக்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பதிவாளர் வி.பெருவழுதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயிரியல் துறை இணைப் பேராசிரியர் எ.பன்னீர் செல்வம் வரவேற்றார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து அறிவியல் மன்றத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
இப்பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் 4 அறிவியல் துறைகளை ஒருங்கினைத்து அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து துறைகளிலும் மன்றங்கள் தொடங்க வேண்டும். அதன் மூலம் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராமப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவர்களுக்கு அறிவியல் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.
இன்றைய சூழலில் ஆராய்ச்சி மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழகங்களில் மேலை நாடுகளைப் போன்ற உயர் தொழில்நுட்ப அறிவியல் உபகரணங்கள் கொண்ட ஆய்வகங்கள் அமைப்பது மிக அவசியம். அதன் மூலம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்றார்.
விழாவில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணிதத் துறை இணைப் பேராசிரியர் ஆர்.விஜயராகவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.