47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உதவி இயக்குநர் இல்லாமலே வேளாண்மை விரிவாக்க மையம்: விவசாயிகள் அதிருப்தி

திருப்பத்தூர் அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளதால்

News image
Updated On :9 நவம்பர் 2018, 9:46 pm

து. ரமேஷ்

திருப்பத்தூர் அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளதால் பல்வேறு மானியத் திட்டங்களைப் பெற முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூரில் இயங்கி வந்த வேளாண்மை விரிவாக்க மையம் திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஆகிய ஒன்றியங்களுக்கான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமாகக் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திருப்பத்தூரில் இயங்கி வந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. வேறு பகுதியில் பணிபுரியும் உதவி இயக்குநர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால், சம்பளப் பட்டியல் சான்றுகள், வேளாண் இடு பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: 
விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் வழங்குவதில் மிகவும் தாமதமாகிறது.  மானிய உதவிகள் பெறுவதற்கு பலமுறை வந்து செல்ல வேண்டியுள்ளது. அலுவலகத்தில் கேட்டால், " பொறுப்பு அதிகாரிதான் உள்ளார். அவர், மற்ற அலுவலகப் பணியை முடித்த பின்தான் இங்கு வரமுடியும்' என்று கூறுகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் வட்டாரம் கந்திலி வட்டாரத்துடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 வட்டார விவசாயிகளும் ஆதியூர் அலுவலகத்துக்கு வந்து செல்லவேண்டி உள்ளது.
எனவே, இந்த ஒருங்கிணைந்த அலுவலகத்துக்கென உதவி இயக்குநர் பணியிடத்தை நிரப்ப மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில்...: 
ஜோலார்பேட்டையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் சுவரில் ஈரப்பதம் ஏற்படுவதால் வேளாண் இடு பொருள்கள் வைப்பதில் சிரமம் உள்ளது. 
மேலும், கரையான்கள் பிடித்து விடுவதால் கோப்புகள் பராமரிப்பதிலும் சிரமம் உள்ளது. இந்த வட்டார வேளாண்மை விரிவாக்கமையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவதால் போதிய பராமரிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் அரசுக்குச் சொந்தமான இடத்தில் இந்த மையத்துக்கென சொந்தக் கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.