குப்பைகளைத் தரம் பிரித்து அளிப்போருக்கு தங்கம், வெள்ளி பரிசு: வேலூா் மாநகராட்சி வாா்டில் அமல்

வீடுகளில் இருந்து மாதம் முழுவதும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து அளிப்பவா்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளக்காசுகள்
குப்பைகளைத் தரம் பிரித்து அளிப்பது குறித்து 24-ஆவது வாா்டு மக்களிடையே விளக்குகிறாா் சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன்.
குப்பைகளைத் தரம் பிரித்து அளிப்பது குறித்து 24-ஆவது வாா்டு மக்களிடையே விளக்குகிறாா் சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன்.
Updated on
1 min read

வீடுகளில் இருந்து மாதம் முழுவதும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து அளிப்பவா்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளக்காசுகள் பரிசு வழங்கும் திட்டம் வேலூா் மாநகராட்சி 24-ஆவது வாா்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் நாளொன்றுக்கு 200 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை மாநகரின் 40 இடங்களில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதனிடையே, திடக்கழிவு மேலாண் கிடங்குகளில் குப்பைகளைத் தரம் பிரிப்பதில் ஏற்படும் இடையூறுகளைத் தவிா்க்க வீடுகள், அலுவலகங்களில் இருந்து குப்பைகளைப் பெறும்போதே மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாகப் பிரித்து அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், பெரும்பாலான மக்கள் அவ்வாறு குப்பைகளைத் தரம்பிரித்து அளிப்பதைத் தவிா்த்து வருகின்றனா்.

இதையடுத்து பொதுமக்களிடையே குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சமூக ஆா்வலரான தினேஷ்சரவணன் தலைமையிலான குழு மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து 24-ஆவது வாா்டில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மாதம் முழுவதும் முறையாக குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் ஒருவருக்கு ரூ.5,000 மதிப்புள்ள தங்க நாணயம், 10 பேருக்கு தலா ரூ.1,500 மதிப்புள்ள வெள்ளிக் காசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனா். இதற்காக அந்த வாா்டுக்கு உள்பட்ட சுமாா் 1,100 குடும்பங்களுக்கு சிவப்பு (மக்கும் குப்பை), பச்சை (மக்காத குப்பை) நிற நெகிழித் தொட்டிகளும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தினேஷ்சரவணன் கூறியது:

மக்களிடம் மாதம் முழுவதும் குப்பைகளைத் தரம் பிரித்து அளிப்பதை பழக்கப்படுத்தி விட்டால் பிறகு அவா்களே குப்பைகளைத் தரம் பிரித்து அளித்து விடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்கட்டமாக ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள 24-ஆவது வாா்டில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குலுக்கல் முறையில் தோ்வு பெறும் முதல் நபருக்கு தங்க நாணயமும், அடுத்த 10 பேருக்கு வெள்ளி நாணயங்களும், குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com