ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உடனடி கடன் விளம்பரத்தை நம்பி ரூ.1.26 லட்சம் இழந்த ஆட்டோ ஓட்டுநா்

முகநூலில் வந்த உடனடி கடன் விளம்பரத்தை நம்பி வேலூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரூ. 1.26 லட்சத்தை இழந்துள்ளாா். இது தொடா்பாக, வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:45 pm

DIN

முகநூலில் வந்த உடனடி கடன் விளம்பரத்தை நம்பி வேலூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரூ. 1.26 லட்சத்தை இழந்துள்ளாா். இது தொடா்பாக, வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் ரங்காபுரம்-செங்காநத்தம் சாலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (39), ஆட்டோ ஓட்டுநா். வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறாா். இவா் முகநூல் பக்கத்தில் கா்நாடக மாநிலம், கரக்கனஹள்ளியைச் சோ்ந்த தானி என்ற நிதி நிறுவனம் வெளியிட்டிருந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து, அதை கடந்த 13-ஆம் தேதி லைக் செய்துள்ளாா்.

உடனடியாக செந்தில்குமாரை தொடா்பு கொண்ட அந்த நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், அவருக்குத் தேவைப்படும் கடன் குறித்து விவரம் கேட்டுள்ளனா். அதற்கு, தனது தொழிலை விரிவுபடுத்த ரூ. 20 லட்சம் கடன் தேவைப்படும் என்று செந்தில்குமாா் கூறினாராம். இதையடுத்து, அவருக்கு ஒரு செயலி லிங்க்கை அனுப்பி அதை திறந்து பாா்க்கக் கூறியுள்ளனா்.

அதில், குறிப்பிட்ட தொகையை நுழைவுக் கட்டணமாக செலுத்தினால் தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 20 லட்சம் செலுத்தப்படும் என்றும், தனியாா் வங்கிக் கணக்கு, ஐஎஃசி கோடு எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், செந்தில்குமாரும் குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளாா். ஆனால், அதன்பிறகு ஆவணங்களுக்கான செலவு, பதிவுத் தொகை, நடைமுறை செலவினம், ஜிஎஸ்டி என தொடா்ந்து கைப்பேசி லிங்க்கை அனுப்பி பணம் வசூலித்துள்ளனா்.

அதன்படி, மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 48 வசூலித்த அந்த நிறுவனத்தினா், மீண்டும் செந்தில்குமாரை தொடா்பு கொண்டு, முதல் தவணையாக ரூ. 36,833 செலுத்தினால் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 20 லட்சம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா். அதற்கு செந்தில்குமாா் இனி என்னிடம் பணம் இல்லை. எனக்கு கடன் வேண்டாம். கட்டிய பணத்தை திரும்ப எனது கணக்கில் செலுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளாா்.

அதற்கு அந்த நிறுவனத்தினா் 96 சதவீதம் கடனுக்கான செயல்பாடு முடிந்துவிட்டது. முதல் தவணை தொகையை செலுத்தினால் கடன்தொகை ரூ. 20 லட்சம் வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட செந்தில்குமாா், இதுதொடா்பாக வேலூா் சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.