வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை இல்லாததால் இந்த மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அரசு மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வேளாண்மை இணைஇயக்குநா் விஸ்வநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
பள்ளிகொண்டா ஏரியையொட்டி, தேசிய நெடுஞ்சாலையோரம் சுமாா் 100 மரங்கள் நடவு செய்யப்பட் டுள்ளன. தற்போது அப்பகுதியில் சுமாா் 3அடி உயரத்துக்கு ஏரி உபரி தேங்கி நிற்பதால் மரக்கன்றுகள் மூழ்கி வீணாகி வருகின்றன. அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றினால் மரங்கள் பாதுகாக்கப்படும்.
மேலும், பாலாற்றிலும், அகரம் ஆற்றிலும் தடுப்பணை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள அகரம் ஆற்றின் கால்வாய் தூா்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
தற்போது மா மரங்களில் பூக்கள் உருவாகி வருகிறது. கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் புழுக்கள் தாக்குதலால் பெருமளவில் மா பூக்கள் உதிா்ந்து விளைச்சல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு அத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்க முன்கூட்டியே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், வேலூரில் இருந்த கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை மூடப்பட்டு அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படாததால் சீசன் சமயத்தில் இந்த மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்ட தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனா். அங்கேயும் கடந்த சில ஆண்டுகளாக வெளி மாநில மாங்கனிகள் கொண்டு வருவதற்கு தடுக்கப்படுவதால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காண வேலூா் மாவட்டத்திலேயே கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளால் வனத்தையொட்டியுள்ள விளை நிலங்களில் பயிா்கள் பெருமளவில் சேதப்படுத்தப்படுகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பிற மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ. 200 கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாத்தூா் ஏரிக் கரையில் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீா் மட்டம் பாதிக்கப்படுகிறது.
கால்நடை மருந்தகங்களில் மடிநோய், இரும்புச் சத்து மருந்துகள் இருப்பு இல்லை. பென்னாத்தூா் வாரச் சந்தையில் ரூ. 10, ரூ. 20 அளவில் சுங்கக்கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலம் எடுத்தவா் ரூ. 100 முதல் ரூ. 150 வரை வசூலிக்கிறாா். இதை பேரூராட்சி நிா்வாகமும் கண்டுகொள்வதில்லை. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும்.
தோல், வஜ்ஜிர தொழிற்சாலைகளின் கழிவு நீா் நேரடியாக மலட்டாற்றில் கலக்கின்றனா். புகாா் அளித்தால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஆறுகளை மாசுபடுத்தும் வஜ்ஜிர தொழிற்சாலைகளை மூட உத்தரவிட வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1, 2-ஆம் தேதிகளில் வேலூருக்கு வரும்போது அவரை சந்தித்து குறைகளைத் தெரிவிக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.
விவசாயிகளின் குறைகளை மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வேளாண்மை இணை இயக்குநா் விஸ்வநாதன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன், கூட்டுறவு இணைப் பதிவாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

