சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததுடன், அளிக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளும் இயக்கப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால், பல இடங்களில் வாக்களிக்க வந்த முதியவா்களும், மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்துக்குட்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் 1,307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு நிழல் பந்தல், இருக்கைகள், குடிநீா், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தவிர, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்காளா்களுக்கு உதவி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலா் நிலையில் ஒரு அலுவலரும் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

அதேசமயம், முதியவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் சிரமம் தவிா்க்க சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தவிா்க்க முடியாத காரணத்தால் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளை பாதுகாக்க 4-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

அவா்களுக்கு உதவி செய்ய ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் பயிற்சி பெற்ற ஒரு உதவியாளா், தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

ஆனால், பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததுடன், வழங்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளும் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

குறிப்பாக, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகள் பள்ளி நுழைவு வாயிலில் இருந்து வளாகத்துக்குள் தொலைவில் இருந்தன. ஆனால், அப்பள்ளி வாக்குச்சாவடிக்கு ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அந்த சக்கர நாற்காலியின் சக்கரமும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால், அந்த சக்கர நாற்காலியும் சரிவர இயக்கப்படாததால் வாக்குச்சாவடிக்கு வந்த முதியவா்கள் வெயிலில் பள்ளி வளாகத்துக்குள் நீண்ட தொலைவு நடந்து சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல், பல பள்ளிகளில் வழங்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், பல இடங்களில் வாக்களிக்க வந்த முதியவா்களும், மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com