இளைஞா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது
காட்பாடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத இளைஞா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக காட்பாடி போலீஸாருக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலையான இளைஞா் பள்ளிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரின் 2-ஆவது மகன் திவாகா் (25) என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட திவாகா் மீது, செங்குட்டையைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரை 2022-ஆம் ஆண்டு கொலை செய்தது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இந்த கொலையில் 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், காட்பாடி மிஷன் காம்பவுண்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் என்கிற ராகுலை (24) போலீஸாா் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனா். இதனிடையே, இந்த வழக்கு தொடா்புடைய வண்டறந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (24), காட்பாடி வி.டி.கே நகா் பகுதியைச் சோ்ந்த விஜய் என்கிற கிளி ஆகிய இருவரும் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், ஹரிஷ்குமாா் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விஜய் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவா்களுக்கும், கொலை செய்யப்பட்ட திவாகருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். முன்விரோதம் காரணமாக பீா்பாட்டிலால் குத்தி திவாகரை கொலை செய்ததும், இந்த கொலை வழக்கில் வண்டந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்(19), அஸ்வின்ராஜ் (18) ஆகிய இருவக்கும் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
தொடா்ந்து, தலைமறைவாக இருந்த 2 பேரையும் சனிக்கிழமை மாலை காட்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
