மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு மருத்துவமனை

உதகை,  டிச.7:  நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உதகை அரசு பெண்கள் மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள்
Updated on
1 min read

உதகை,  டிச.7:  நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உதகை அரசு பெண்கள் மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் பிரசவத்திற்கு வரும் பெண்கள் வெகுவாக சிரமப்படுகின்றனர்.

  உதகையில் மகப்பேறு மருத்துவத்திற்காக அரசினர் சேட் 24 மணி நேர மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 3 மகப்பேறு மருத்துவர்களும், 2 மயக்க மருந்து நிபுணர்களும் தேவை. இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு 200 பிரசவங்களும், நாளொன்றுக்கு 4 சிசேரியன் பிரசவங்கள் உள்பட 7 பிரசவங்களும் பார்க்கப்படுகின்றன.

  உதகையிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் மகப்பேறு மருத்துவத்திற்காக திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் வந்து சென்றனர். ஆனால், கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதால் வெளி மாவட்டங்களிலிருந்து மகப்பேறு மருத்துவர்கள் யாரும் உதகைக்கு வருவதில்லை.

  இதன் காரணமாக எம்எஸ் படித்த மருத்துவர்களே பிரசவம் பார்க்கின்றனர். அத்துடன் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலிருந்தும் மருத்துவர்கள் இந்த மருத்துவமனைக்கு பணிக்காக அனுப்பப்படுகின்றனர். இதனால், அரசு தலைமை மருத்துவமனையிலும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. உதகையில் மருத்துவர்கள் இல்லை என்பதற்காக பிரசவத்திற்காக வருபவர்களை கோவைக்கு பரிந்துரைக்காமல் எம்எஸ் படித்தவர்களை வைத்தே மனிதாபிமான அடிப்படையில் பிரசவம் பார்ப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  அதேபோல குன்னூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவருமில்லை. மயக்க மருந்து நிபுணரும் இல்லை. இதன் காரணமாக அங்கு பிரசவம் பார்க்கப்பட்டாலும் சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை. கூடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இருந்தாலும் மயக்கமருந்து நிபுணர் இல்லாததால் இங்கும் சிசேரியன் பார்க்கப்படுவதில்லை. இங்கு சிசேரியனுக்காக வருபவர்கள் உதகைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

  அதனால் கூடலூரிலிருக்கும் மகப்பேறு மருத்துவரை உதகைக்கோ அல்லது குன்னூருக்கோ பணியிடத்தை மாற்றித் தரலாம் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் உதகை மகப்பேறு மருத்துவமனைக்கு 3 பச்சிளங்குழந்தை பராமரிப்பு மருத்துவர்களும் அத்தியாவசிய தேவையாக உள்ளனர்.

  மாவட்டத்தில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்காக செல்ல ஏழை, எளிய மக்களால் முடியாத நிலை உள்ளது.

எனவே, தமிழக அரசு சுகாதாரத்துறை நீலகிரி மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அளவில் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களை பணியமர்த்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com