தண்ணீரில் மிதக்கும் பள்ளி
திருப்பூர், நவ.10: தரமற்ற ஓடுகளைக் கொண்டு பள்ளிக் கூரைகள் வேயப்பட்டுள்ளதால் மழைநீர் உள்ளே புகுந்து வகுப்பறைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
இதனால் மாணவர்கள் அமர இடமின்றி வளாகத் கல்வி கற்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் தனியார் மூலம் பல லட்சம் மதிப்பில் 5 கணினிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான இயந்திரங்கள், கலர் டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் கல்வி கற்பதுடன், யோகா, விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் சிறப்பிடம் பிடித்து வருகின் றனர்.
மாவட்ட அளவில் சிறப்பு பெற்று வரும் இப்பள்ளியில் உள்ள 2 கட்டடங்களும் "ஒன்றிய பள்ளிகள் புனரமைப்பு திட்டம்' மூலம் கடந்த மே மாதம் ரூ.2.74 லட்சம் மதிப்பில் பழுதுபார்க்கப்பட்டன. பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டபோது பள்ளியின் கூரைகளில் தரமற்ற ஓடுகள் வேயப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெருமளவில் தண்ணீர் ஒழுகி வகுப்பறைகள் முழுவதும் குளம் போலாகியுள்ளன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் அமர இடமின்றி வளாகத்தில் கல்விகற்கும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
"கடந்த மாதம் பெய்த மழையின்போதே வகுப்பறைகளுக்குள் தண்ணீர் ஒழுகியது குறித்து பொங்கலூர் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் அவதிப்படுவதுடன், அரசுப் பள்ளியில் கல்வித்தரம் உயர நல்லுள்ளம் கொண்டோர் இலவசமாக வழங்கிய கணினி, மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களும் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர் அப்பகுதி பிரமுகர்கள்.
இதுதவிர இரவு நேரங்களில் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை தடுக்க சுற்றுச்சுவர் எழுப்பவும் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கும் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
புகார் இல்லை: "அப்பள்ளியில் மழையால் தண்ணீர் ஒழுகுவது குறித்து பள்ளி தரப்பிலிருந்து இதுவரை புகார்கள் வரவில்லை.
அவ்வாறு புகார்கள் வரும்பட்சத்தில் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரிபுரசுந்தரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
