உதகை, செப். 8: தமிழக மின் வாரியத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தலைமை அலுவலர் பதவி பல மாதங்களாக காலியாகவே இருப்பதால் இந்த அமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு "விஜிலென்ஸ்' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மூத்த காவல்துறை உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அதேபோல, தமிழக மின் வாரியத்திலும் கூடுதல் காவல்துறை தலைவர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டு வந்தனர். பொதுவாக இப்பதவிக்கு வருபவர்கள் மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலை கண்காணிக்கும் முழு பொறுப்புடையவர்கள்.
அதுமட்டுமின்றி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்படும்
குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வாரியத்திற்கு தங்களது பரிந்துரையை அனுப்புவர். இவரது தலைமையின்கீழ் மின்வாரியத்தில் 7 மண்டலங்களிலும் சிறப்புக் குழுக்களும் உள்ளன. இக் குழுவில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் பதவிகளில் தாற்காலிகப் பணியிட மாறுதல் பெற்றும் பணிபுரிவர்.
விஜிலென்ஸ் துறை இருப்பதாலேயே ஊழியர்களும் பயத்துடன் பணியாற்றுகின்றனர். பிரச்னைகளுக்குத் தீர்வாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பரிந்துரை மட்டுமே செய்வர். இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மின்வாரியத்திடமே இருக்கும்.
பொதுவாக, விஜிலென்ஸ் விசாரணை பாரபட்சமின்றி இருக்குமென்பதால் அவர்களது பரிந்துரையை அப்படியே வாரியம் செயல்படுத்திவிடும். எவ்வளவு பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக இருந்தாலும் விஜிலென்ஸ் விசாரணையில் சிக்கிய ஊழியரை காப்பாற்றுவதற்குப் பகீரதப் பிரயத்னம் செய்தாக வேண்டும். அதேபோல விஜிலென்ஸ் விசாரணைக்குட்பட்டே ஊழியர் இடமாற்றமும் இருக்கும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஜிலென்ஸ் அதிகாரி பணியிடம் தமிழக மின்வாரியத்தில் கடந்த பல மாதங்களாகவே காலியாக உள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பணியிடமே காலியாக இருப்பதால் மேல்முறையீடு செய்வதற்கும் வழியில்லாமல் தவிக்கின்றனர் ஊழியர்கள். இப்பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக ஐஏஎஸ் பொறுப்பிலுள்ள மின் வாரியத் தலைவரே கவனித்து வருகிறார்.
பொதுவாக, பொதுமக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு
ரகசியமாக அனுப்புவர். ஆனால், தற்போதுó இத்தகைய குற்றச்சாட்டுகள் நிர்வாகத்தின் கைகளுக்கே நேரடியாகச் செல்கிறது. இதனால் விஜிலென்ஸ் மீதே நம்பிக்கை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழக மின் வாரியத்தில் ஊழல் குற்றசாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் உயர் அதிகாரிகள் அடுத்த ஒரு சில நாட்களிலேயே பணியிட மாறுதல் பெற்று பணிக்குத் திரும்பிவிடுகின்றனர்.
இத்தகைய நிலை ஆபத்தானது என எச்சரிக்கின்றன தொழிற்சங்கங்கள். விசாரணையின் முடிவு தெரியும் வரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டால்தான் விசாரணை இடையூறின்றி நடைபெறுமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, விஜிலென்ஸ் தலைமை அதிகாரியை உடனடியாக நியமிக்கும் முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.