உதகை, ஜன. 8: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக வரும் 13-ம் தேதி முதல் அடுத்த மாதம் 24-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கூறியது:
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 4 வட்டாரங்களில், மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, தகுதியுள்ள நபர்களுக்கு இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் திட்டம் மூலம் உதவித் தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வரும் 13-ம் தேதி உதகை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 27-ல் கூடலூரில் தேவாலா சமுதாயக் கூடத்திலும், பிப்ரவரி 10-ல் வலிங்டன் கன்டோன்மென்ட் பள்ளி வளாகத்திலும், 24-ல் கோத்தகிரி என்சிஎம்எஸ் அரங்கிலும் நடைபெறும்.
தங்கள் குடும்பத்தில் மாற்றுத் திறனாளிகள் எவரேனும் இருப்பின், அவர்களை அந்த முகாமுக்கு அழைத்து வர வேண்டும். குடும்ப அட்டை நகல் மற்றும் பிற ஆதாரங்கள் இருப்பின் அவற்றையும், மாற்றுத் திறனாளிகளின் பாஸ்போர்ட் அளவிலான 4 புகைப்படங்களையும் கொண்டு வர வேண்டும்.
முகாமில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை நிர்ணயிக்கக் கூடிய மருத்துவக் குழுவினர் பங்கேற்பர்.
மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து, அங்கேயே மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலரால் அடையாள அட்டை அங்கேயே வழங்கப்படும்.
80 சதம் மாற்றுத் திறனாளிகளாக இருந்து, அவர்களது பெயர் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள நபர்களின் பட்டியலில் இருந்தால், உடனடியாக உதவித் தொகை
உத்தரவும் அங்கேயே வழங்கப்படும்.
முகாம்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களின் பட்டியலுடன் ஆஜராக வேண்டும்.
மேலும், குன்னூர், உதகை, கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளின் ஆணையர்கள்,
சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர், வார்டு வாரியாக எடுக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களின் பட்டியலுடன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக அனைத்து படிவங்கள் மற்றும் அலுவலர்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட சமூக நல அலுவலர், வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் ஆகியோர் அங்கேயே இருந்து, உடனடியாக ஆணைகளை வழங்க ஏதுவாக ஆவணங்கள் மற்றும் படிவங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நலப் பணியாளர்களையும், சத்துணவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்களையும் இதில் முழு அளவில் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களை முகாமுக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அதேபோல, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், தங்களது மையங்களில் பணியாற்றும் அமைப்பாளர்களை முழு அளவில் ஈடுபடுத்தி, மாற்றுத் திறனாளிகளை முகாமுக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் குடும்பத்தினர் இச்சிறப்பு முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து அரசு உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.