பருத்தி வரத்து குறைவால் நூல் விலை 10% உயர்வு!

ஈரோடு, ஜூலை 7: வட மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பருத்தி வரத்து குறைந்துள்ளதால் நூல் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழக நூற்
Updated on
2 min read

ஈரோடு, ஜூலை 7: வட மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பருத்தி வரத்து குறைந்துள்ளதால் நூல் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக நூற்பாலைகளுக்கு நூல்களை அளிக்கும் முக்கிய மையமாக ஈரோடு சந்தை திகழ்கிறது. இங்குள்ள சுமார் 3000 நூல் வியாபாரிகள் மூலமாக 60 முதல் 70 சதவீத நூல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நூற்பாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் நூல்களை காடாத் துணிகளாக உற்பத்தி செய்கின்றன. காடாத் துணிகளில் இருந்து அனைத்து வகை ஜவுளிகளும் உற்பத்தியாகின்றன.

படுக்கை விரிப்புகள், பாவாடைத் துணிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய 20-ம் நம்பர் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர்வை ரகங்களுக்கு 30-ம் நம்பர் நூலும், லுங்கி, சட்டை, சேலைகளுக்கு 40-ம் நம்பர் நூலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பருத்தி விலை கண்டுக்கு (356 கிலோ) ரூ.31,500-ல் இருந்து ரூ.34,500 ஆக உயர்ந்துள்ளதால், கடந்த 2 வாரங்களுக்குள் சுமார் 10 சதவீதம் வரை நூல் விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கச் செயலர் பி. ரவிச்சந்திரன் கூறியது:

20-ம் நம்பர் பாவு நூலின் விலை ரூ.535-ல் இருந்து ரூ.600 ஆகவும், வார்ப்பு நூல் ரூ.590-ல் இருந்து ரூ.670 ஆகவும் உயர்ந்துள்ளன. 30-ம் நம்பர் வார்ப்பு நூல் ரூ.880-ல் இருந்து ரூ.980 ஆக அதிகரித்துள்ளது. 40-ம் நம்பர் பாவு நூல் ரூ.880-ல் இருந்து ரூ.980 ஆகவும், வார்ப்பு நூல் ரூ.980-ல் இருந்து 1,050 ஆகவும் உயர்ந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக நூல்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நூல் விலையைக் கட்டுப்படுத்தினால்தான் ஜவுளி விலை உயர்வைத் தடுக்க முடியும் என்றார்.

ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் எஸ். சிவானந்தன் கூறியது:

மின்வெட்டால் கடந்த 3 ஆண்டுகளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிப்புகளைச் சந்தித்து வந்தனர். இப்போது திடீரென நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளியின் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலும், உள்ளூரிலும் ஆர்டர் எடுத்து ஜவுளி விற்பனை செய்வோருக்கு அதிக இழப்பு ஏற்படும்.

ஜவுளித் தொழிலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என். சிவநேசன் கூறியது:வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி, டாலருக்கு நிகரான ரூபாய் விலை வீழ்ச்சி ஆகியவற்றால் பருத்தி வரத்து குறைந்துவிட்டது. பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் இந்த ஆண்டு பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆன்லைன் வர்த்தக வியாபாரிகள் பருத்தியைப் பதுக்கியதும் நூல் விலை உயர்வுக்கு ஒரு காரணம். கடந்த ஆண்டு இந்தியாவில் 338 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டபோது 250 லட்சம் பேல் உள்நாட்டு தேவைககு தேவை மீதமுள்ள பருத்தியை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துவிட்டது. இதை இருப்புவைத்திருந்தால் இப்போது பருத்தி விலை உயர்ந்து நூல் விலை அதிகரித்திருக்காது.

பருத்தியை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பஞ்சாலைக் கழகம் நேரடியாகக் கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com