ஈரோடு, மார்ச் 3: ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்கள் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார், எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார், ஜெ.சுத்தானந்தன் ஆகியோரின் சிலை திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில், சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து செங்குந்தர் கல்விக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் இல்லாத காலத்தில் கடந்த 1942-ம் ஆண்டில் செங்குந்தர் கல்விக் கழகம் அமைத்து, பள்ளி அமைக்க முயற்சி எடுத்தவர் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம் ஆகியவற்றை உருவாக்கியவர் எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார். அதேபோல செங்குந்தர் கல்விக் கழகத்துக்கு 23 ஆண்டுகள் செயலராக இருந்து இக் கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தியவர் ஜெ.சுத்தானந்தன்.
இவர்களது சிலைகள் திறப்பு விழா, ஈரோடு செங்குந்தர் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு செங்குந்தர் கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல் தலைமை வகிக்கிறார்.
முருகேச முதலியார் சிலையை, ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. கே.வி.ஞானசம்பந்தனும், மீனாட்சிசுந்தரனார் சிலையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், சுத்தானந்தன் சிலையை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வி.சங்கரசுப்பையனும் திறந்து வைக்கின்றனர்.
விழாவில், சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் ஏ.ராஜவேலு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
செங்குந்தர் கல்விக் கழக செயலர் எஸ்.சிவானந்தன், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து, எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், கல்விக் கழக முன்னாள் தலைவர் ஏ.முனுசாமி முதலியார் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.