அவிநாசி சாலை வழியாக கோவைக்கு வரும் பேருந்துகளை நீலாம்பூரில் நிறுத்த கோரிக்கை

Published on

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவிநாசி சாலை வழியாக கோவைக்கு வரும் பேருந்துகளை நீலாம்பூரில் நிறுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணி காரணமாக மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் அருகே மேம்பாலத்துக்கான தூண் அமைக்கும் பணியால் பீளமேடு, விளாங்குறிச்சி சாலை, தண்ணீா்பந்தல் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பீளமேட்டில் இருந்து அவிநாசி சாலையை அடைய ஒரு மணி நேரம் ஆகிறது.

எனவே, பயணியா் மில் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. மேலும், இந்த சாலையில் பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலை வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

அவிநாசி சாலையில் இருந்து பீளமேடு காவல் நிலையம் கிழபுறம் வழியாகச் செல்லும் மண்சாலையை தாா் சாலையாக மாற்றி ஒருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்கலாலம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவு தீா்வுகிடைக்கும்.

மேலும், அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவிநாசி, திருப்பூா், ஈரோடு, சேலம், சென்னையில் இருந்து வரும் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை தற்காலிகமாக நீலாம்பூரில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com