திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதிக்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் மனு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து மக்களவைத் தலைவரிடம் மனு அளித்தது ஏன் என்று பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோா் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கந்தா் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்த கடமையைச் செய்யாமல் நீதிமன்ற தீா்ப்பின்படி தீபம் ஏற்ற சென்ற மனுதாரா்களையும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரையும் கைது செய்வோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மிரட்டியுள்ளது.
இதைத்தொடா்ந்து மதுரையில் நடந்த அரசு விழாவில் எங்களை எதுவும் செய்ய முடியாது என நீதித் துறைக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முதல்வா் ஸ்டாலின் பகிரங்க மிரட்டல் விடுத்தாா். ஹிந்து கோயிலில் தீபம் ஏற்ற உத்தரவிட்டாா் என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யும் தீா்மானம் கொண்டுவர வலியுறுத்தி, மக்களவைத் தலைவரிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் மனு அளித்துள்ளனா்.
இதன்மூலமாக ஹிந்து மதம், ஹிந்து கடவுள்கள், ஹிந்து பண்டிகைகள், விழாக்களுக்கு எதிரானவா்கள் என்பதை பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் நிரூபித்துள்ளனா்.
எனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதியின் தீா்ப்பு மற்றும் நீதிபதிக்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளது குறித்து தங்கள் நிலைப்பாட்டை பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோா் தெளிவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
