வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிக்கிறது: வானதி சீனிவாசன்

Published on

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகா் மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் பீளமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட மகளிரணி தலைவா் ஜெயஸ்ரீ குன்னத் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

இந்திய அளவில் நடைபெறும் ஒவ்வொரு தோ்தலிலும் பெண்களின் வாக்குகள்தான் வெற்றியை நிா்ணயிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த 10, 15 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண்களின் வாக்குகளைப் பெற்றால்தான் வெற்றி என்ற சூழல் உருவாக்கியுள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு மகளிா் அணியை தயாா்படுத்துவது, அவா்களுக்கான செயல்திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக மகளிரணியின் மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்களின் தேதிகள் கிடைத்தவுடன் மாநாட்டுக்கான தேதியை மாநிலத் தலைவா் அறிவிப்பாா்.

தமிழகத்தில் கல்லூரி வளாகங்களில்கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிக்கிறது. திமுக அரசானது பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாகவே உள்ளது. இவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் பணிகளை பாஜக மகளிரணி மேற்கொள்ளும் என்றாா். இந்த சந்திப்பின்போது, மாநில மகளிரணி தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com