கல்லாறு செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம்
வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட்டை ஒட்டியுள்ள கல்லாறு செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
பழங்குடியின மக்களுக்கான கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என வன உரிமைத் தலைவா் ராஜேஸ்வரி அண்மையில் மனு அளித்திருந்தாா்.
இதை ஏற்று கல்லாறு செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் குமரன், வட்டாட்சியா் அருள்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வால்பாறை நகராட்சிக்குள்பட்ட சின்கோனா, கல்லாறு, உடுமன்பாறை, சங்கரன்குடி மற்றும் பரமன்கடவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 2008 வன உரிமைச்சட்டத்தின்படி தேவைப்படும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சாலை, மருத்துவ வசதி ஏற்படுத்துதல், குடியிருப்புகள் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை பழங்குடியின மக்கள் வலியுறுத்தினா்.
மேலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா், வனத் துறை, காவல் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

