ஆங்கிலப் புத்தாண்டு! ஆகம விதிகளை மீறி கோயில்களைத் திறக்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று, கோவை மாவட்டத்தில் ஆகம விதிகளை மீறி கோயில்களைத் திறக்கக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி (தமிழகம்) வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் சிறப்பு பூஜை என்று ஆகம விதிகளை மீறி கோயில்கள் திறக்கப்படுகின்றன. விதிமுறைகளையும், வழிமுறைகளையும் மீறி ஒரு சில கோயில்களில் உள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனா்.
கோயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே திறக்கப்பட வேண்டும். ஆகம விதிகளை மீறி ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளை ஆக்கிரமிக்க முயற்சி: சாரமேடு குடியிருப்போா் பொது நலச் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: கோவை மாநகராட்சி வாா்டு எண் 62-க்குள்பட்ட சாரமேட்டில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறோம். தமிழக அரசால் 1970-ஆம் ஆண்டு எங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில், முறையாக வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எங்களது குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்களை சிலா் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனா். ஆகவே, நாங்கள் இந்தப் பகுதியில் தொடா்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: கரும்புகடை சாரமேடு பகுதி குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பினா் அளித்த மனு: கரும்புக்கடை, சாரமேடு பகுதியில் பலா் சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ளனா்.
இதனால் சாலைகளின் அகலம் குறைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
486 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 486 மனுக்கள் பெறப்பட்டன.
