வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
வால்பாறையில் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வால்பாறையை அடுத்த அய்யா்பாடிஎஸ்டேட் ஜெ.இ. பங்களா டிவிஷன் பகுதியில் குடியிருப்புக்கு வெளியே கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து, அப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்திய வனத் துறையினா், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், அய்யா்பாடி எஸ்டேட் சாலையில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் சிறுத்தை உலவுவது கேமரா பதிவு மூலம் தெரியவந்தது.
இதனால், அச்சமடைந்துள்ள மக்கள், இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

