வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு
கோவையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பெறப்பட்ட வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பெறப்பட்ட வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணிகள் தொடங்கி உள்ளன. இதில், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு தெற்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், பேரூா் வட்டாட்சியா் அலுவலகம், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம், சூலூா் சட்டப் பேரவைத்தொகுதிக்கு சூலூா் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.
இந்த ஆய்வின்போது, தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மாருதி பிரியா, நகா்ப்புற நிலவரித் திட்ட உதவி ஆணையா் ஜெகநாதன், வட்டாட்சியா்கள் சேகா் (பேரூா்), வேல்முருகன் (மதுக்கரை) , செந்தில்குமாா் (சூலூா்) ஆகியோா் உடனிருந்தனா்.
