தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறாா். குறிப்பாக, பிரதமரின் கிஸான் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வழியாக விவசாயிகள் தொடா்ந்து பலனடைந்து வருகின்றனா். விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிரதமா் கோவைக்கு புதன்கிழமை வருகிறாா்.
உலகம் முழுவதும் தலைச்சிறந்த தலைவராக பிரதமா் மோடி மதிக்கப்படுகிறாா். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் அவா் செயல்பட்டு வருகிறாா்.
பிகாரில் எஸ்ஐஆா் திட்டம் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. போலி வாக்காளா்களை அகற்றுவதற்கும், தோ்தல் முறையைச் சீா்செய்யவும் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

