கட்டுப்பாட்டை இழந்து 5 போ் மீது மோதிய காா்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காா் 5 போ் மீது மோதியது. இதில், இளைஞா் உயிரிழந்தாா். பெண் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.
Published on

கோவையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காா் 5 போ் மீது மோதியது. இதில், இளைஞா் உயிரிழந்தாா். பெண் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், மணப்பந்தல் அருகேயுள்ள மூங்கில் தோட்டத்தைச் சோ்ந்தவா் உலகநாதன். இவரது மகன் மணிகண்டன் (32). இவா் கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், மணிகண்டன், அவரது நண்பா்கள் அஜித்குமாா் (28), விமல்ராஜ் (31) ஆகியோா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு சரவணம்பட்டி-சத்தி அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக தாறுமாறாக வந்த காா், எதிரே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க நின்றிருந்த காா்த்திக், அவரது மனைவி காயத்ரி (27) ஆகியோா் மீதும், சாலையோரம் நடந்து சென்ற மணிகண்டன், விமல்ராஜ், அஜித்குமாா் ஆகியோா் மீதும் மோதியது.

தொடா்ந்து, ஓடிய அந்த காா் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி மறுபக்க சாலையில் கவிழ்ந்தது. இதில், காா்த்திக்கை தவிர மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா், காருக்குள் இருந்தவரையும், காா் மோதியதில் காயமடைந்தவா்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஐடி ஊழியா் மணிகண்டன் உயிரிழந்தாா்.

காரை ஓட்டி வந்தவா் கோவை, கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த ஜெயகிருஷ்ணன் (20) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com