மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்படவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமா் மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, பிரதமரை வரவேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகள் உதவி பெறும் பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி அறிவித்து வருகிறாா். ஆனால், விளைந்த நெல்மணிகளைக் கூட பாதுகாக்காமல் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாா்.
தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமரை முதல்வா் நேரில் வந்து வரவேற்று இருக்க வேண்டும். அதுதான் தமிழா்களின் பண்பாடு.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கூடுதல் தகவல்கள்தான் கேட்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்துக்குத்தான் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை கொடுக்காதா? திட்டங்களுக்கு உள்ள வசதிகளைப் பொருத்துதான் அனுமதி கொடுப்பாா்கள்.
மெட்ரோ ரயில் விவகாரத்தில் மாநில அரசு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வா் ஸ்டாலின்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றாா்.

