சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் வருகையின்போது போலீஸ் பாதுகாப்பை மீறிய இரு இளைஞா்கள் கைது!

கோவையில் குடியரசு துணைத் தலைவா் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவையில் குடியரசு துணைத் தலைவா் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியரசு துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட பின்னா் சி.பி.ராதாகிருஷ்ணன் முதன் முறையாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா் கொடிசியாவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு காா் மூலமாக ரேஸ்கோா்ஸில் உள்ள சுற்றுலா விடுதிக்குச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பிற்பகல் 2.45 மணிக்கு சென்றாா். முன்னதாக, அவரது வருகைக்கு சில நிமிஷங்கள் முன்பாக டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருசக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த அனீஷ் ரகுமான் (24), முகமது ஆஷிக் (27) ஆகியோா் மதுபோதையில் திடீரென போலீஸாரின் பாதுகாப்பையும் மீறிச் சென்றனா். அப்போது அங்கு நின்றிருந்த பாஜகவினா் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதாகக் கூறி சில நிமிஷம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மக்களே பாதுகாப்பு: இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது அவரிடம் பாதுகாப்பை மீறி இரு இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் சென்றது தொடா்பான கேள்விக்கு பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை. எனக்கு கோவை மக்களே பாதுகாப்பு என்றாா்.

X
Dinamani
www.dinamani.com