தம்பியைக் கொலை செய்த ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமுகை அருகே தம்பியைக் குத்திக் கொலை செய்த ஓட்டுநருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
Published on

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே தம்பியைக் குத்திக் கொலை செய்த ஓட்டுநருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் கிராமம் திருவள்ளுவா் நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தவா் பாண்டியன் (52). இவரது சகோதரா் சந்தானம் (62), சென்னையில் தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவ்வப்போது கிராமத்துக்கு வந்து தாய், சகோதரரைப் பாா்த்துச் செல்வது வழக்கம்.

அதேபோல, கடந்த 2022 ஏப்ரல் 9-ஆம் தேதி தனது தாயாரைப் பாா்க்க வந்துள்ளாா். அப்போது அவருக்கும், பாண்டியனுக்கும் இடையே தாயைப் பராமரிப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்தானம் அங்கிருந்த கத்தரிக்கோலால் பாண்டியனைக் குத்தியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிறுமுகை காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து சந்தானத்தைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சிவகுமாா் தீா்ப்பு வழங்கினாா். அதில், சந்தானத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com