வழிப்பறிக்கு முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

பாா் ஊழியரிடம் வழிப்பறிக்கு முயன்ற வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Updated on

பாா் ஊழியரிடம் வழிப்பறிக்கு முயன்ற வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் பாண்டிகுமா (39). இவா், திருப்பூா், திருநீலகண்டபுரத்தில் தங்கியிருந்து கொங்கு மெயின் ரோட்டில் உள்ள மதுக்கூடத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 2019 நவம்பா் 29-ஆம் தேதி பாண்டிகுமாா், தனது வீட்டில் இருந்து கொங்கு மெயின் ரோட்டில் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த திருப்பூா் பூலுவப்பட்டி அருகேயுள்ள அறிவொளி நகரைச் சோ்ந்த குணசேகரன் (27) என்பவா் பாண்டிகுமாரை வழிமறித்து, ‘தான் கத்தி வைத்திருப்பதாகவும், பணம், கைப்பேசியைத் தருமாறும் கூறி மிரட்டினாா்.

பாண்டிகுமாா் சப்தம் போடவே அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து குணசேகரனை சுற்றிவளைத்து பிடித்தனா். பின்னா் அவரை திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குணசேகரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவா் செந்தில்ராஜா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com