தேர்தல் களத்தில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்!

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, மத்தியப் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எஃப்.) பெண்கள் படைப் பிரிவு முதல் முதலாக ஈடுபடுத்தப்படுகிறது.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, மத்தியப் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எஃப்.) பெண்கள் படைப் பிரிவு முதல் முதலாக ஈடுபடுத்தப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதி நடக்கிறது. 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக 65,616 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. 3,500 இடங்கள் பதற்ற நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் அமைக்கப்படும் 3,770 வாக்குச் சாவடிகளில், 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும்.

இந்தப் பகுதிகளில் போலீஸாருடன் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

பெண்கள் பட்டாலியன்: இந்த முறை கூடுதலாக துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். அதன்படி 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் படிப்படியாக கடந்த சில நாள்கள் சிறப்பு ரயில்கள் மூலம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், முதல் முதலாக மத்தியத் தொழிலகப் பாதுகாப்பு படையின் பெண்கள் பட்டாலியன் வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு மட்டும் ஒரு பெண்கள் கம்பெனியும், மற்ற கம்பெனிகள் பிற நகரங்களுக்கும் அனுப்பப்டுவர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்துக்கு இந்தப் பெண் வீராங்கனைகள் வருகை தருவதும், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதும் இதுவே முதல் முறையென காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மகளிர் வாக்குச்சாவடி: பெண் பாதுகாப்பு படை காவலர்கள், வாகன சோதனை, ரோந்து, கொடி அணிவகுப்பு ஆகிய அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் வாக்குப் பதிவு நாளன்று, மகளிர் வாக்குச்சாவடிகளில் இவர்கள் பாதுகாப்புப் பணியில்

ஈடுபடுவர். ஏனெனில், பெண் வாக்குச்சாவடிகளிலும் கள்ள வாக்குகள், ஆள் மாறாட்டம் செய்து வாக்குகளை பதிவு செய்வது போன்ற தில்லுமுல்லு வேலைகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல்துறையால் கருதப்படுகிறது. முன்னோட்டமாக சிறிய அளவிலேயே பெண்கள் பட்டாலியன் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் கிடைக்கும் அனுபவத்தையும், அவர்களது பணியைப் பொருத்து அடுத்து வரும் தேர்தலில் பெண்கள் பட்டாலியன்கள் பயன்படுத்தப்படும் என்று போலீஸார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com