கோவையில் முதல்முறையாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையில், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய இளைஞருக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் நுரையீரல் நல மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ராமநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையைச் சேர்ந்தவர் ரவி துர்சைனி (31). இவர் கடந்த 7 ஆண்டுகளாக மூச்சு விட முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால், கடந்த 4 ஆண்டுகளாக 24 மணி நேரமும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும் வாழ்ந்து வந்தார்.
இதற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இதைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவி துர்சைனிக்கு ஒன்றரை மாதத்துக்கு மேலாக பல்வேறு கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நுரையீரல் அவருக்கு தானமாகக் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு ரவி துர்சைனிக்கு, 12 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்தியாவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மட்டுமே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த அறுவை சிகிச்சையை அமெரிக்காவைச் சேர்ந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஞானேஷ் தாக்கர், பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் நுரையீரல் நல மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ராமநாதன், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் கணேசன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.