கோவையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் அவரது சகோதரர் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் உண்ணி என்கிற ரமேஷ் (32). இவர், துடியலூர் என்.ஜி.ஜி.ஓ.காலனி நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டிவந்தார். இவரது சகோதரர் மனோஜ்குமார் (28). இவரும் அதே நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டிவந்தார்.
ரமேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மனோஜிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில், துடியலூர் மதுக் கடை அருகே மனோஜும், அவரது நண்பரான விஜய் ஆனந்திடமும் 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணம் கேட்டு ரமேஷ் தகராறு செய்தாராம். இதனால், ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார் தனது நண்பர்களான கிரி என்கிற வெள்ளிங்கிரி (35), சங்கர் (24), விஜய் ஆனந்த், பாலு ஆகியோருடன் சேர்ந்து ரமேஷைக் கொலை செய்து வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள கிணற்றில் வீசினர்.
இச்சம்பவம் நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு வெள்ளக்கிணறு கிராம நிர்வாக அலுவலரிடம் வெள்ளிங்கிரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கிணற்றில் இருந்த ரமேஷின் சடலத்தை துடியலூர் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மனோஜ்குமார், கிரி என்கிற வெள்ளிங்கிரி, சங்கர், விஜய் ஆன்ந்த், பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கொலைக் குற்றத்துக்காக மனோஜ்குமார், வெள்ளிங்கிரி, விஜய் ஆனந்த் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும், தடயங்களை மறைத்த குற்றத்துக்காக மூவருக்கு இரு ஆண்டுகள், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி கிறிஸ்டோபர் புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட சங்கர், பாலு ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.