ரௌடி குத்திக் கொலை: நண்பர்கள் இருவரிடம் போலீஸார் விசாரணை

கோவையில் ரௌடியை  குத்திக் கொன்றதாக  அவரது நண்பர்கள் இருவர்  மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

கோவையில் ரௌடியை  குத்திக் கொன்றதாக  அவரது நண்பர்கள் இருவர்  மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  கோவை, புலியகுளம் அருகேயுள்ள சிறு காளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்ட்டின் (29). இவர் மீது ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லியோ மார்ட்டின் வசிக்கும் பகுதியிலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பலருடன் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. 
  இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்ற லியோ மார்ட்டின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் லியோ மார்ட்டினைத் தேடியுள்ளனர். அப்போது, அலமேலுமங்கலம் வீதி அருகே  சாலையோரமாக அவர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது தெரியவந்தது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
  இந்தச் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், லியோ மார்ட்டினின் நண்பர்கள், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மது போதையில் இருந்து லியோ மார்ட்டின் புலியகுளம் ஆறுமுகம் தெருவில் உள்ள தனது நண்பர் தருண் (22) வீட்டுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரம் அங்குள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்த லியோ மார்ட்டின் போதை தெளிந்துவிட்டதால் கஞ்சா தருமாறு தருணிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து லியோ மார்ட்டின் அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து தருணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தருண், அவரது நண்பர் சண்முகம் (19) ஆகியோர் கத்தியால் லியோ மார்ட்டினின் மார்பு, கழுத்து, வயிறுப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். பின்னர், அவரது உடலை சாலையில் வீசிவிட்டு அங்கிருந்து  அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. 
   இந்நிலையில்,  தருண்,  சண்முகம் ஆகிய இருவரையும்  கோவை-பொள்ளாச்சி சாலையில் வைத்துப் பிடித்த போலீஸார் அவர்களிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com