ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்: தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 01st April 2019 08:58 AM | Last Updated : 01st April 2019 08:58 AM | அ+அ அ- |

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2019-2021 ஆம் ஆண்டுகளுக்கான மையப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநிலத் தலைவராக ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறை இணைப் பேராசிரியர் என்.பசுபதி, பொதுச் செயலாளராக திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் எம்.எஸ்.பாலமுருகன், பொருளாளராக சென்னை பச்சையப்பன் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் பா.இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். கல்லூரி ஆசிரியரின் பணிநிலைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவ தமிழக அரசு வழங்கியுள்ள அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை 1.1.2019 தேதியிட்டு உடனே வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தக் கட்டண உயர்வை மாணவர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும்.
மூன்று அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.