சூலூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என உழவர் உழைப்பாளர் கட்சி தெரிவித்துள்ளது.
இக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சூலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் கே.செல்லமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் சூலூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதுடன், வெற்றிக்கு அயராது உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக சூலூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு, வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் விவசாயிகளிடம் ஆதரவுகேட்டு பேசினர். இக்கூட்டத்தில், உ.உ.கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஈஸ்வரன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.