இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:11 AM | Last Updated : 04th January 2019 07:11 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடு போயின.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்கவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மேற்பார்வையில், காவல்ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக சாய்பாபா கோயில், ஜீவா நகரைச் சேர்ந்த மூர்த்தி மகன் தக்காளி (எ)மாதவன் (19), சாமிசெட்டிபாளையம், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மோகன்ராஜ் (33), காரமடை, தோலம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் சண்முகசுந்தரம்(33), சீலியூர், கஞ்சி பள்ளம் பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வடிவேல் (33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நால்வரும் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் 15 இருசக்கர வாகனங்களை போலீஸார் மீட்டனர்.
இது தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.