இஸ்கான் ரத ஊர்வலம்: கோவையில் நாளை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்
By DIN | Published On : 04th January 2019 07:14 AM | Last Updated : 04th January 2019 07:14 AM | அ+அ அ- |

இஸ்கான் ரத ஊர்வலத்தை முன்னிட்டு கோவை மாநகரில் சனிக்கிழமை (ஜனவரி 5) போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்தி:
கோவை இஸ்கான் ஸ்ரீஜெகந்நாதர் ரத ஊர்வலம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாலக்காடு, பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதியில் செல்ல அனுமதியில்லை.
சுங்கம் பை-பாஸ் ரயில்வே மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்தும் லங்கா கார்னரில் இருந்து பாலக்காடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரிய கடை வீதி, வின்சென்ட் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். பேருந்துகள் வழக்கம்போல டவுன்ஹால் வழியாக உக்கடம் அடையலாம். ஆனால், பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதிக்கோ, ஒப்பணக்கார வீதிக்கோ செல்ல அனுமதியில்லை.
அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகியவற்றுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவாரப்பேட்டை வழியாக காந்தி பார்க் அல்லது பூ மார்க்கெட் வழியாகச் செல்ல வேண்டும். தடாகம் சாலையில் இருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை வழியாக சிவாலயா திரையரங்கம் சாலை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைக்குச் செல்ல வேண்டும்.
பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் அடைந்தும் அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், காந்தி பார்க் அடைந்தும் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆர்.ஜி.வீதி மற்றும் வைசியாள் வீதிக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
மேலும், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி, ஆர்.ஜி. வீதி, டி.கே. மார்க்கெட் ஆகிய சாலைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.