வியாபாரிகள், தொழிற்சங்கத்தினரிடம் குறைகேட்ட பொள்ளாச்சி தொகுதி எம்.பி.
By DIN | Published On : 09th June 2019 03:06 AM | Last Updated : 09th June 2019 03:06 AM | அ+அ அ- |

வால்பாறையில் வியாபாரிகள் அமைப்பு, தொழிற்சங்கத்தினரிடம் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கு.சண்முகசுந்தரம் சனிக்கிழமை குறைகளை கேட்டறிந்தார்.
இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வால்பாறை பகுதியில் நிலவும் பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள், தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்த கருத்துகளை எம்.பி. கு.சண்முகசுந்தரம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விரைவில் வால்பாறை பகுதியில் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்தில் கிடப்பில் உள்ள திட்டங்கள், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பின்னர் வளர்ச்சிப் பணிகளுக்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.