வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை: ஆட்சியர் தகவல்
By DIN | Published On : 14th June 2019 08:44 AM | Last Updated : 14th June 2019 08:44 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்பட இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணையை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடங்களுக்கு 5 மாதங்கள் மட்டுமே கணக்கிட்டு தள்ளுபடி செய்வதாகவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, கோவை மாவட்ட வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்களில், ஏற்கெனவே முழுத் தொகையையும் செலுத்தியவர்கள் நீங்கலாக, ஏனைய ஒதுக்கீடுதாரர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதி வாரியப் பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக, மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சலுகை 2020-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியன்று முடிவடைய இருப்பதால் ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 2493359 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.