சூலூர் அருகே வாகனச் சோதனையில் துப்பாக்கி பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 07:10 AM | Last Updated : 30th March 2019 07:10 AM | அ+அ அ- |

சூலூர் அருகே வங்கிகளுக்குப் பணம் கொண்டுச் செல்லும் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் சென்ற துப்பாக்கியை தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் புறவழிச் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் திருப்பூர் 5 ஆம் பகுதி மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சுந்தரராஜன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் உதவி ஆய்வாளார் ஜீவானந்தம், காவலர் விஜய்அமிர்தராஜ் உள்ளிட்ட சூலூர் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள யூனியன் வங்கிக் கிளையில் இருந்து பிற வங்கிகளுக்குப் பணம் கொண்டுச் சென்ற வாகனம் பல்லடத்தில் இருந்து குனியமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த ஒரு பெட்டி பூட்டு போடப்பட்டு இருந்தது. அந்தப் பெட்டியை பறக்கும் படையினர் திறக்கச் சொல்லியுள்ளனர்.ஆனால், வாகன ஓட்டுநர் பெட்டியைத் திறக்க மறுத்துள்ளார். இதையடுத்து, பறக்கும் படையினர் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி இருந்துள்ளது. அதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மேலும் குடிபோதையில் இருந்த வாகன ஓட்டுநர் முருகானந்தத்தை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.
மேலும் அவர் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தின் பாதுகாவலராக உள்ளார் என்பது தெரியவந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...