நாட்டுத் துப்பாக்கியால் மான் வேட்டையாடிய 4 பேர் கைது
By DIN | Published On : 05th May 2019 11:58 PM | Last Updated : 05th May 2019 11:58 PM | அ+அ அ- |

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியால் மான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதி, செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து, பொள்ளாச்சி வனச் சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48), மாரப்பக் கவுண்டன்புதூரைச் சேர்ந்த தமிழரசன் (38), பெரியபோதுவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (51), கேரள மாநிலம், நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29), மாரப்பக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த துரைசாமி (62) ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜ், பிரகாஷ், துரைசாமி ஆகியோரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கைதானவர்களில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலேயே நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு மான் கொம்புகள், நாட்டுத் துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் - 76 ,இரட்டைக் குழல் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்கள் - 24 , வெடிமருந்து, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவற்றையும் வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.