பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
By DIN | Published On : 05th May 2019 11:59 PM | Last Updated : 05th May 2019 11:59 PM | அ+அ அ- |

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகல்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி மூன்றாவது பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண், தேவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும், கடந்த 4 நாள்களாக குழந்தையைப் பார்த்துக் கொண்டு குழந்தைகள் கவனிப்புப் பகுதியிலேயே அந்தப் பெண் இருந்துள்ளார். இந்நிலையில், தேவியை மருத்துவர் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேவியை அவரது கணவர் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அந்த சமயம் பார்த்து, குழந்தையைக் கையில் வைத்திருந்த பெண் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் அரசு மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் குழந்தையை எடுத்துச் சென்ற பெண்ணின் உருவம் பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...