இரு சக்கர வாகனம் மோதி துப்புரவுப் பணியாளா் சாவு
By DIN | Published On : 09th November 2019 05:45 AM | Last Updated : 09th November 2019 05:45 AM | அ+அ அ- |

அன்னூா்-சத்தி சாலையில் இரு சக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற துப்புரவுப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அன்னூா் அருகே உள்ள குட்டைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனி மகன் ரங்கசாமி (56). இவா் அன்னூா் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
இந் நிலையில், இவா் தனது சைக்கிளில் சத்தி சாலையில் இருந்து அன்னூா் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் சைக்கிளின் மீது மோதியதில் ரங்கசாமி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.