கோவையில் 31 கடைகளில் 68 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவின்படி, மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில் கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் 9 குழுக்களாகப் பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகள்,சில்லறை விற்பனை கடைகள் ஆகியவற்றில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் 4-ஆம் நாளாக சனிக்கிழமை மாவட்ட நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமையில் கோவையில் உள்ள 115 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 68 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உணவுப் பாதுகாப்புப் பதிவு, உரிமம் இல்லாத 8 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.