மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் 3 வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளதால், திங்கள்கிழமை (செப்.2) முதல் இணையதளத்தில் முன்பதிவு தொடங்குகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பில்லூர் அணை, பரளிக்காடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் பரளிக்காட்டில் காரமடை வனத் துறை, பழங்குடியின மக்கள் இணைந்து சூழல் சுற்றுலாவை நடத்துகின்றனர்.
மலைவாழ் மக்களை கொண்டு நடத்தப்படும் இந்தச் சுற்றுலாவில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நடைபெறும் படகு சவாரியில் பயணம் செய்து இயற்கையை கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா தொடர்ந்து 3 வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தென்மேற்கு பருவ மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 88, 000 கன அடிவரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்று வந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் காலவரையின்றி ரத்து செய்யபட்டது. இணையதள முன்பதிவுகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பருவ மழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து அணைக்கு நீர்வரத்து தற்போது 3,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா இந்த வாரம் முதல் மீண்டும் துவங்க உள்ளதாக காரமடை வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலாவுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (செப்.2) முதல் இணையதளம் மூலம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பூச்சிமரத்தூர் பகுதியில் சுற்றுலாவுக்காக உள்ள வனத் துறை தங்கும் விடுதியும் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த அடர்ந்த வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.