மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் விக்கி. இவர் கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது கல்லூரி நண்பர்கள் 4 பேருடன் கோவையில் இருந்து அன்னூர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி செவ்வாய்கிழமை காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை விக்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது, மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு அருகே வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வெங்காயம், இளநீர்க் கடைக்குள் புகுந்தது.
இதில் காரில் வந்த கோவையைச் சேர்ந்த அருண் (19), ஈசாக் (19), கிஷோர் (19), நடராஜ் (19) மற்றும் விக்கி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த மூன்று பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.