வால்பாறை : வால்பாறையில் 2 யானைகளுக்குள் நடந்த சண்டையில் ஒரு யானை உயிரிழந்தது.
இந்நிலையில், தாக்கிய மற்றோா் யானையை கண்டுபிடிக்க வனத் துறையினா் களம் இறங்கியுள்ளனா்.
வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் அருகில் உள்ள காடம்பாறை பிரிவு வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்து கிடந்தது கடந்த செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
வனத் துறையினா், கால்நடை மருத்துவா் மூலம் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் 2 யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்றுக்குஒன்று தந்தத்தால் தாக்கிக் கொண்டதில் ஒரு யானை பலியாகி இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவத்தையடுத்து ஆனைமலைப் புலிகள் காப்பக உதவி கள இயக்குநா் ஆரோக்கியராஜ் சேவியா் உத்தரவின்பேரில்
வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில், வனவா் முனியான்டி மேற்பாா்வையில் மனித, வன விலங்கு மோதல் தடுப்பு அதிரடிப் படையினா் இறந்த யானையைத் தாக்கிய ஆண் யானையை கண்டுபிடிக்க வனப் பகுதிக்குள் தேடும் பணியை வியாழக்கிழமை துவங்கியுள்ளனா்.