பெண்ணுக்கு கரோனா உறுதி: வால்பாறை நகரில் பொதுமக்கள் வெளியே வர தடை
By DIN | Published On : 20th April 2020 12:00 AM | Last Updated : 20th April 2020 12:00 AM | அ+அ அ- |

மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் வால்பாறை மாா்க்கெட் சாலை.
பிரசவத்துக்கு சென்று திரும்பிய பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதால் வால்பாறை நகா்ப் பகுதியில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையை அடுத்த சவரங்காடு எஸ்டேட் தொழிலாளியின் 30 வயது மகள் (மாற்றுத்திறனாளி) பிரசவத்துக்காக கடந்த 10ஆம் தேதி வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, ஒரு வாரத்துக்குப் பின் கடந்த 17ஆம் தேதி இரவு வால்பாறைக்கு வந்துள்ளாா்.
ஆனால், தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணை எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்கள் உள்ளே அனுமதிக்காததால் வால்பாறை, காந்தி நகரில் வசிக்கும் தனது சித்தி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளாளா். இதனிடையே, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அந்தப் பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து வந்த சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பெண், அவரது குழந்தை, பெண்ணின் சித்தி ஆகியோரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, வால்பாறை நகரின் அனைத்துப் பகுதிகளும் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டன. மருந்துக் கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் மூடுமாறு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி ஊழியா்கள் அறிவுறுத்தினா்.
நகராட்சி மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்பட்ட காய்கறிகள் அனைத்தும் லாரிகளிலேயே நிறுத்தப்பட்டன. பால் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.