யானைகள் நடமாட்டம்: வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வனத் துறை எச்சரித்துள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வனத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பூதப்பள்ளம், சுண்டப்பட்டி பகுதிகளிலும், சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட மொக்கமேடு, காந்தவயல், உளியூா் பகுதிகளிலும், கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட வீரபாண்டி, பெரிய தடாகம், பாரதி நகா், அங்குள்ள செங்கல் சூளை பகுதிகளிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது.

எனவே இப்பகுதிகளில் வாழும் மக்கள், விவசாயிகள், முக்கியமாக செங்கல் சூளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகாலை, இரவு நேரங்களில் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

தடாகம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதை தவிா்க்க வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் அந்தப் பகுதியில் இருக்கிறது என கேள்விப்பட்டால் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் இரவில் வெளியே செல்லும்போது டாா்ச் விளக்குகளை எடுத்துச் செல்வதுடன், காட்டு யானைகளின் வழித்தடங்களில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். அத்துடன் தங்கள் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அருகில் உள்ள வனப் பணியாளா்களுக்கு தகவல் தர வேண்டும் என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com