கோவை: மருமகளிடம் இருந்து 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தரக்கோரி மூதாட்டிகள் 4 பேர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்கிழமை காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மூதாட்டிகள் 4 பேர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மூதாட்டிகள் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்.
விசாரணையில், அன்னூர் வட்டம், குப்பனூரைச் சேர்ந்தவர் ப.முருகாத்தாள் (97). இவருக்கு மாராத்தாள் (75), லட்சுமி (70), பாப்பாத்தி (65) என்ற மகள்களும், ரங்கசாமி (55) என்ற மனும் உள்ளனர்.
மூதாட்டியின் பெயரில் இருந்த12 ஏக்கர் விவசாய நிலத்தை அவரது மகன் ரங்கசாமி தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு ரங்கசாமி உயிரிழந்த நிலையில் 12 ஏக்கர் நிலம் ரங்கசாமியின் மனைவி பாப்பாத்தி கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மூதாட்டியும், அவரது மூன்று மகள்களும் நிலத்தை மூதாட்டி பெயருக்கு மீண்டும் மாற்றித்தர வலியுறுத்தி பாப்பாத்தியிடம் கேட்டுள்ளனர். ஆனால் நிலத்தை தர மறுத்ததுடன் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இந்நிலையில் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி முருகாத்தாள், மாராத்தாள், லட்சுமி, தங்கமணி ஆகிய 4 பேரும் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.