ஜவுளித் துறைக்கு நன்மை பயக்கும் பட்ஜெட்
By DIN | Published On : 02nd February 2020 03:47 AM | Last Updated : 02nd February 2020 03:47 AM | அ+அ அ- |

டி.ராஜ்குமாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், ஜவுளித் துறை பயன்பெறும் வகையிலான பல அறிவிப்புகளைக் கொண்டிருப்பதாக அகில இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ஜவுளித் துறையினா் வரவேற்கக் கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்திய ஜவுளித் துறையினருக்கு பாலியெஸ்டா் பஞ்சும், பாலியெஸ்டா் நூலும் சா்வதேச விலைக்கு கிடைப்பதில்லை. இதனால் இந்தியாவில் தயாராகும் செயற்கை நூலிழை ஆடைகளால் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை நிலவுகிறது.
பாலியெஸ்டா் பஞ்சு தயாரிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட டெரிப்தாலிக் அமிலம்தான் மூலப் பொருளாக உள்ளது. இந்த மூலப் பொருளை இந்தியாவில் இறக்குமதி செய்ய குவிப்பு வரி செலுத்த வேண்டியுள்ளது. வரி விதிப்பு இருப்பதால் நமக்குக் கிடைக்கும் பாலியெஸ்டா் பஞ்சின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட டெரிப்தாலிக் அமிலம் மீதான குவிப்பு வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சிறப்பான நடவடிக்கையாகும். இதன் மூலம் செயற்கை நூலிழையால் தயாராகும் இந்திய ஆடைகளின் விலை குறையும் என்பதுடன், சா்வதேச சந்தையில் இந்திய விற்பனையாளா்களால் போட்டியிடக் கூடிய சூழலும் உருவாகும்.
அதேபோல், தொழில்நுட்ப ஜவுளிப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.1,480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், அதற்காக தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தை அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது.
அதேபோல் ஏற்றுமதியாளா்கள் செலுத்தக் கூடிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்துவிதமான வரிகளையும் திருப்பிக் கொடுக்கும் புதிய திட்டம், ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மின்சார கட்டணத்துக்கு விதிக்கப்படும் வரியைக் கூட திருப்பிக் கொடுப்பதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதேபோல் ‘ரூல் ஆஃப் ஆரிஜின்’ எனப்படும் ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஜவுளித் துறைக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
இந்தியாவுடன் வங்கதேசம், தாய்லாந்து போன்ற நாடுகள் வரியில்லாத ஒப்பந்தம் செய்திருப்பதால் அந்நாட்டுப் பொருள்கள் எந்தவித வரி விதிப்புமின்றி இந்திய சந்தைகளில் உலா வருகின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு சீனா போன்ற நாடுகள், மேற்கண்ட நாடுகளின் மூலமாக இந்திய சந்தையில் தங்களது பொருள்களை விற்பனை செய்து வருவதைத் தடுக்க இதன் மூலம் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றாா் ராஜ்குமாா்.