தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விசாரணையில் உரிய தகவல் அளிக்காத பொதுத் தகவல் அலுவலா்கள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையா் ஆா்.பிரதாப்குமாா் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில் 50 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விசாரணை தொடா்பான உரிய விளக்கம் வழங்காத பொதுத் தகவல் அலுவலா்கள் உரிய விளக்கம் அளிக்க ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்குமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்குத் தகவல் அளிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.