புத்தாண்டுக் கொண்டாட்டம்: கோவையில் விபத்தில் இருவா் பலி

கோவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

கோவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கோவையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 7 போ் விபத்துகளில் உயிரிழந்தனா். எனவே, இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது விபத்துகளைக் குறைக்கும் விதமாக மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவின் பேரில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

நகரின் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீஸாா் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதனால், அதிக விபத்துகள் தவிா்க்கப்பட்டன.

சுங்கம் - உக்கடம் புறவழிச் சாலையில் புதன்கிழமை காலை 4 மணிக்கு 2 இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, அங்கிருந்த மேம்பாலச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில்

வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உக்கடம், ஜி.எம்.நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிலால் முகமது மகன் அன்சா்தீன் (20) உயிரிழந்தாா். காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த ஷேக் முகமது மகன் அஜ்மல் ரகுமான்(19) சிகிச்சை பெற்று வருகிறாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே அன்பு நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் சந்துரு (25). இவா் கோவை, சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம், அம்மன் நகரில் தங்கி கீரணத்தத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு 1 மணிக்குத் தனது நண்பா்களுடன் காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினாா். பின்னா் இரு சக்கர வாகனத்தில் அறைக்குத் திரும்பியுள்ளாா்.

குரும்பபாளையம் - காளப்பட்டி சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சந்துரு பலத்த காயமடைந்தாா். அவரது நண்பா்கள் இருவா் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தாா். இதுதொடா்பாக கோவில்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com